"அரசமைப்பின் 20ஆவது திருத்தம் சர்வாதிகாரப் போக்குக்கும் இராணுவ ஆட்சிக்கும் வழிகோலி விடும்."
- இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"மட்டக்களப்பில் பௌத்த தேரர் ஒருவர் அரச உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததோடு அவர்களைத் தாக்கியும் உள்ளார். அட்டகாசம் புரிந்த அந்தத் தேரர் முன் பொலிஸாரும் மண்டியிட்டு கெஞ்சுகின்றனர். சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம் என்பது அங்கு மீறப்பட்டுள்ளது.
இந்தத் தேரர் பல தடவைகள் மிக மோசமாக நடந்து கொண்டார். நான் ஒட்டுமொத்த பௌத்த தேரர்களையும் குறைகூறவில்லை. இன நல்லிணக்கத்தைப் பேணும் பல தேரர்கள் இருக்கின்றனர். ஆகவே, ஒரு சிலர் செய்யும் வேலைகள் பௌத்த மதத்தை இழிவுபடுத்துவதாக அமைந்து விடுகின்றன.
சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் தங்களுக்கு சிங்கள பௌத்தர்களே வாக்களித்தனர் எனக் கூறுகின்றனர். கிழக்கில் தொல்பொருள் செயலணியை நிறுவிவிட்டு அதில் முழுவதுமாக பௌத்தர்களை நியமித்திருந்தனர். அந்தச் செயலணியில் நியமிப்பதற்குத் தகுதியான ஒரு தமிழரை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தமிழ் அமைச்சர் ஒருவரே கூறுகின்றார். அந்தளவுக்குப் பௌத்த ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கு வக்கற்றவர்களாக உள்ளனர்.
எவ்வளவு வேகமாக வடக்கு, கிழக்கைக் கபளீகரம் செய்து இது பௌத்த சிங்கள நாடு என்பதைத் தெளிவாகக் காட்டுவதற்கு அரசு முயல்கின்றது. இதற்கு நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு எங்களுடைய கடுமையான எதிர்பை வெளிக்காட்ட வேண்டும்.
20ஆவது திருத்தம் கொண்டுவரப்படுவதன் பிரதான நோக்கம், ஜனாதிபதிக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களைக் குறைத்த 19ஆம் திருத்தத்தை இல்லாமல் செய்வதாகும். இது சர்வதிகாரப் போக்குக்கும் எதிர்காலத்தில் இராணுவ ஆட்சிக்கும் வழிகோலிவிடும்" - என்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்